டெங்கு ஒழிய வேண்டுமென்றால், அதிமுக ஆட்சி போக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

டெங்கு ஒழிய வேண்டுமென்றாமல், தற்போதைய ஆட்சி முதலில் அகற்றப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

டெங்கு ஒழிய வேண்டுமென்றாமல், தற்போதைய ஆட்சி முதலில் அகற்றப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொளத்தூர் தொகுதியில் வியாழக்கிழமை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சீனிவாசா நகரில் உள்ள லோகோ ஸ்கீம் 2-ஆவது தெரு, ஜவஹர் வீதி மற்றும் வில்லிவாக்கம் ரயில்வே இருப்புப்பாதை பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணியை ஸ்டாலின் மேற்கொண்டார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 
டெங்கு காய்ச்சலால் ஏறக்குறைய 15,000 பேர் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், திமுக சார்பில் டெங்கு பாதிப்பை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தோம். 
அந்தப் பணிகளில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி, அதன்படி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அப்படிப்பட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
டெங்கு பாதிப்புகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். 
டெங்கு நோய் எப்படி ஏற்படுகிறது, அதில் இருந்து பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது போன்ற விவரங்களையெல்லாம் துண்டறிக்கைகளாக அச்சடித்து தொகுதி முழுவதும் வழங்கி வருகிறோம்.
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முக்கியக் காரணமாக அமைந்திருப்பது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதுதான். உள்ளாட்சித் தேர்தல் உரிய நேரத்தில், முறைப்படி நடந்திருந்தால் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பேற்று இருந்திருப்பர். அவர்கள் ஆங்காங்கே ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளைக் களைந்திருப்பர். அதன் மூலம் டெங்கு காய்ச்சல் நிச்சயமாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்.
ஆனால், தற்போதைய ஆட்சி ஒருபக்கம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் இருந்து கொண்டு, உயர் நீதிமன்றமே உத்திரவிட்டும், அந்தத் தீர்ப்பை மதிக்காமல் உள்ளாட்சித் தேர்தலை இதுவரையிலும் நடத்தாமல் உள்ளது. அதனால்தான் டெங்கு காய்ச்சல் இந்தளவுக்குப் பரவி இருக்கிறது.
எனவே, டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமென்றால் எடப்பாடி தலைமையில் இருக்கும் இந்த ஆட்சி முதலில் போக வேண்டும்.
முரண்பாடு: டெங்கு காய்ச்சலில் இறந்தவர்கள் குறித்த விவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கரும், முதல்வரும் முரண்பாடாகக் கூறி வருகின்றனர். அவர்களுக்குள் ஒரு முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. டெங்கு பாதிப்பை உடனே கட்டுப்படுத்த வேண்டும். 
எதிர்க்கட்சித் தலைவர் தவறான குற்றச்சாட்டுகளை சொல்கிறார், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத் தயாரா என்று அமைச்சர் சரோஜா கேள்வி எழுப்புகிறார். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் அவர் நேரில் சென்று பார்த்தால் போதிய ஆதாரங்கள் கிடைக்கும். தேவையெனில் நானும் தருவதற்குத் தயாராக இருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com