சென்னை: சென்னையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், மக்களுக்கு பயனுள்ள வகையிலும் இலவச சைக்கிள் திட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களான ஈக்காட்டுத்தாங்கல், நேரு பூங்கா, திருமங்கலம், அண்ணாநகர், வடபழனி, ஷெனாய்நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் சேவையில், ஒவ்வொரு மாதமும் முதல் 100 மணி நேரம் இலவசமாக பயணம் செய்யலாம்.
தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த சேவையை தொடங்கியுள்ளது.
இந்த சைக்கிளைப் பெற, செல்போன் மூலம் rake-code bicycle ID என்று டைப் செய்து 9645511155 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் மூலமாக அளிக்கப்படும் பாஸ்வேர்ட்டைக் கொண்டுதான் சைக்கிளை திறக்க முடியும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதி நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்த சேவை செயல்படுத்தப்படுவதால், இது மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.