வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.52.77 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நெசப்பாக்கம், இந்திராநகரைச் சேர்ந்தவர் கணேஷ். துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அவரது வீட்டில் குடியிருந்த ஆர்.பிரகாஷ் (41) மூலம் வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரியும் பாபு (50) மற்றும் அவரது மகன் வினோத் (29) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாபு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருவதாகவும் உயர் அதிகாரிகளின் துணையுடன் வீடுகளை ஒதுக்கீடு பெற்றுத் தர முடியும் என்று கணேஷிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய கணேஷ், பாபு மூலமாக வீடுகளை ஒதுக்கீடு பெற சம்மதம் தெரிவித்துள்ளார். தனக்குத் தெரிந்த 8 நபர்களுடன் சேர்ந்து பாபு மற்றும் அவரது மகன் வினோத்திடம் ரூ. 52.77 லட்சம் கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட பாபு மறைமலை நகரில் வீடு ஒதுக்கீடு ஆணைகளை கணேஷுக்கு வழங்கியுள்ளார். ஆனால் கிரையம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகமடைந்த கணேஷ் ஒதுக்கீடு ஆணைகளை வீட்டு வசதி வாரியத்தில் காண்பித்து விசாரணை செய்தார். அப்போது அவர் பெற்ற ஒதுக்கீடு ஆணைகள் போலியானவை என்பது தெரிந்தது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாபு என்பவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காவலராகப் பணிபுரிந்து வருவதும், தனது மகன் வினோத் மற்றும் பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து ரூ.52.77 லட்சம் வாங்கிக்கொண்டு போலியான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து பாபு, வினோத், பிரகாஷ் ஆகிய மூவரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.