திருப்பதி அருகே ரூ. 2 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருப்பதி கரக்கம்பாடி சாலையில் உள்ள கெஸ்ட்லைன் ஓட்டல் எதிரில் அதிரடிப் படை போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு டிப்பர் லாரியில் சிலர் செம்மரக் கட்டைகள் ஏற்றிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அவர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். ஆனால் போலீஸாரை கண்டதும் அவர்கள் செம்மரக் கட்டைகளை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
அவர்கள் விட்டுச் சென்ற 70 செம்மரக் கட்டைகள், அதைக் கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரி, அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருள்கள், காலி மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ. 2 கோடி என போலீஸார் தெரிவித்தனர்.