விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் வரும் 31 -ஆம் தேதி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த 2015-16, 2016-17 ஆண்டுகளில், தமிழகம் எங்கும் கடுமையான வறட்சி நிலவியது. சில இடங்களில் பருவம் தப்பி பெய்த மழையால் பயிர்கள் மூழ்கி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
கடந்த இரு ஆண்டுகளில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பாசி உள்ளிட்ட பயிறு வகைப் பயிர்களுக்கு எவ்வித பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனால் கிராமப்புற விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசு மேலும் காலதாமதம் செய்யாமல் விவசாயிகளின் வேதனையை உணர்ந்து, அவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் 2015-16, 2016-17 ஆண்டுகளுக்குரிய பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கோவில்பட்டியில் அக்டோபர் 31 -ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.