கடலூரில் உள்ள விழுப்புரம் மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை அலுவலரின் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டு, ரூ.2.4 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் அனந்தராமன். இவர் மீது புகார்கள் வந்ததையடுத்து, விழுப்புரம்-கடலூர் ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி (பொறுப்பு) சரவணக்குமார் தலைமையிலான போலீஸார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர். அங்கிருந்து கடலூரை அடுத்துள்ள குமாரப்பேட்டையிலுள்ள தனது வீட்டுக்கு அனந்தராமன் புறப்பட்டுச் சென்று விட்டதால், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடலூர் சென்றனர். அங்கு அனந்தராமனின் வீட்டில் சோதனையிட்டனர்.
இதில், அவரது காரில் இருந்த ரூ.2.4 லட்சம், சில ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இரவு 9 மணிக்கும் மேலாக இந்த சோதனை தொடர்ந்தது.
மாநிலம் முழுவதும் முக்கிய அரசுத் துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றதையடுத்து, கடலூரிலும் சோதனை நடத்தப்பட்டதாகவும், விசாரணைக்குப் பிறகு புகார் குறித்த விவரம் தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.