திருச்சி: டெங்கு காய்ச்சலுக்காக நிலவேம்பு குடிநீரைப் பருகுவதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது.அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசும், பல தன்னார்வு நிறுவனங்களும் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றன. இருந்த போதிலும் சமீப காலங்களில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைளை எடுத்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று புதுக்கோட்டை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மருத்துவமனைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நிலவேம்பு குடிநீரால் பக்க விளைவுகள் உண்டாகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி குறித்து அவரிடம் கேட்டதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
டெங்கு காய்ச்சலுக்காக நிலவேம்பு குடிநீரைப் பருகுவதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. எனவே சமூக வலைத்தளங்களில் யாரும் தேவையில்லாத தகவல்களை பரப்ப வேண்டாம். தமிழகத்தில் இன்னும் 10 அல்லது 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.