தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதம் முதல் சிறிது சிறிதாக அதிகரித்து வந்தது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் 13,000-த்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம், அதைக் கட்டுப்படுத்த அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தில்லியிலிருந்து மத்திய மருத்துவக் குழுவினர் அண்மையில் ஆய்வு செய்து விட்டுச் சென்றனர்.
தமிழக அரசின் சார்பாக டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக அரசாலும், சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு சரியான மருந்து கிடையாது என்றும், அதனால் மற்ற விளைவுகள் ஏற்படலாம் என கருத்து பரவி வருகின்றது. இதனால் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும் என கமல் தனது ரசிகர்களுக்கு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து நிலவேம்பு கசாயம் குறித்து எதுவும் தெரியாமல் அரைவேக்காட்டுத் தனமாக பேசாதீர்கள் எனநடிகர் கமல்ஹாசனை அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அரசு சித்த மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரான டாக்டர் ஆ சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“உங்கள் அரசியல் ஆசைக்கும், வளர்ச்சிக்காகவும் தயவு செய்து நிலவேம்பு கசாயத்தை குடிப்பதை இழுக்க வேண்டாம். உங்களின் ஒவ்வொரு கருத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்ப்பதாகவே உள்ளது. உங்களுக்கு தெரியாத விஷயத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிடும் நீங்கள், வேண்டுமானால் ஒரு சித்தமருத்துவரை அனுகி சந்தேகத்தை தீர்த்துக்கொண்டிருக்கலாம்.
நீங்கள் கெளரவ டாக்டர் பட்டம் தான் பெற்றவர். நிஜ டாக்டர் அல்ல. நிலவேம்பு பற்றி தெரியாத காருத்தை பதிவிட்ட நீங்களும், போலி மருத்துவர் தான். இனிமேலும் இதுபோல அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதை நிறுத்திவிட்டு உங்களுக்கு நன்றாக வரும் நடிப்பை மட்டும் பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.