திண்டுக்கல்லில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் டெங்கு கொசுப் புழுக்கள் இருந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஆணையர் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார்.
திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தினமும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கொசுப்புழு ஒழிப்பு குறித்து விளக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசு உருவாகும் காரணிகளை அழிக்க அறிவுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு எதிரே, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டுக்கு அருகே உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை ஆய்வு செய்த போது அங்கு டெங்கு புழுக்கள் ஏராளமான உற்பத்தியாவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் மனோகர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.