மெர்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு, நான்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் பொருளாதாரத் திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்து கருத்துகளை வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை அறிந்து, மத்திய அரசின் திட்டத்தால் தமிழக மக்கள் படும் சிரமங்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் கேட்டறிந்து தனது கருத்தை திரைப்படத்தில் பதிவு செய்துள்ளார்.
கருத்துக்கு, கருத்து தெரிவிப்பது நல்ல அரசியல் பண்பு. அதற்கு மாறாக திரைப்படத்தை தடை செய்ய வேண்டும், காட்சிகளை நீக்க வேண்டும், தணிக்கை சான்று அளித்த உறுப்பினர்களை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை, ராஜா உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு சிறு தொழில்கள் தொடங்கி, பெரு நிறுவனங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். இதை தனது திரைப்படம் மூலம் விமர்சனம் செய்ததற்காக, கலவரத்தை தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மெர்சல் விவகாரம் மட்டுமல்லாது, மாட்டிறைச்சி விவகாரம் மற்றும் கேரள முதல்வர் குறித்தும், தாஜ்மகால் குறித்தும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது ஜனநாயக நாட்டுக்கு அழகல்ல.
இதேபோல, நிலவேம்பு கஷாயம் குறித்தும் தேவையற்ற சர்ச்சை கருத்துகளை பரப்பக்கூடாது என்றார் அவர்.