மெர்சல் படம் சிறப்பாக உள்ளது: வைகோ பாராட்டு
மெர்சல் படம் மிகவும் சிறப்பாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்.
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'மெர்சல்'. இந்தப் படத்தில் மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்த வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு பாஜக தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த காட்சிகளை நீக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் உள்ள திரையரங்கில் நேற்று மெர்சல் படத்தைக் கண்டுகளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “படம் மிகவும் சிறப்பாக இருந்தது. விஜய்யின் மூன்று தோற்றங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அற்புதமாக உள்ளது.
படத்தில் மருத்துவமனை சம்பந்தமாக தெரிவித்தக் கருத்துகள் அனைத்தும் தற்போதைய உண்மைநிலையையே விவரிக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சரியான மருத்துவம் கிடைப்பதில்லை. படத்தில் உள்ள கருத்துகள் அனைத்திற்கும் எனக்கு உடன்பாடு உள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.