தஞ்சாவூர்: மெர்சல் படத்தை இண்டர்நெட்டில் பார்த்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம், நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை தொடர்பான வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் படக்குழுவினரை மிரட்டி, அக்காட்சிகளை நீக்க முயற்சி நடைபெற்று வருகிறது. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாத கட்சி எப்படி ஜனநாயக ஏற்புடையது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடேயை மெர்சல் படத்தை இண்டர்நெட்டில் பார்த்தேன் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் எச்.ராஜா கூறினார்.
இந்நிலையில், இன்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் பேசுகையில், நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தை இண்டர்நெட்டில் பார்த்த எச்.ராஜா மீது போலீஸார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி குறித்த கருத்துக்கு எச்.ராஜா விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது.
தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள நடிகர் விஜய், ஜிஎஸ்டியை பற்றி ஒரு வார்த்தை கூறியதற்காக எச்.ராஜாவும், தமிழிசையும் பேசி வருவது வருத்தம் அளிக்கிறது.
மெர்சல் படத்திற்கு அவர்கள் இருவரும் விளம்பரம் தேடி தருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய் நன்றி கடன் பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்க வாசல் போன்றவை திராவிட இயக்கத்திற்கு புத்துணர்ச்சியை தந்தது. இதே போல் கருணாநிதியின் பராசக்தி, திரும்பிபார் போன்ற படங்கள் தமிழகத்தில் புதிய எழுச்சியை உருவாக்கியது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளும் என்று நம்புகிறோம். 2 ஜி வழக்கில் கனிமொழிக்கு தண்டனை கிடைக்க போகிறது. இதை மறைப்பதற்காக ஸ்டாலின் தற்போது எழுச்சி பயணம் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தை மோடி தான் காப்பாற்றுகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதில் இருந்தே மோடி தான் தமிழகத்தை வழி நடத்துகிறார் என தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.