தஞ்சாவூர்: மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்த எச்.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தினகரன் அணி ஆதரவாளராக இருக்கும் நாஞ்சில் சம்பத் தஞ்சையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களுக்காக அதனை பாஜகவின் எச்.ராஜா விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது.
தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ளவர் நடிகர் விஜய். அவர் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரியினைப் பற்றி, ஒரு வார்த்தை கூறி விட்டார் என்பதற்காக எச்.ராஜாவும், தமிழிசையும் தொடர்ந்து தாக்கிப் பேசி வருவது வருத்தம் அளிக்கிறது.
ஆனால் மெர்சல் படத்திற்கு அவர்கள் இருவரும் இலவச விளம்பரம் தேடி தருகிறார்கள். இதற்கு நடிகர் விஜய் அவர்கள் இருவருக்கும் நன்றி கடன் பட்டுள்ளார்.
மெர்சல் படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பார்த்த எச்.ராஜா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.