வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தங்கும் அறைகளை யானைகள் இடித்துச் சேதப்படுத்தியதால், அப்பகுதியில் உள்ள காட்சிமுனைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
வனத்தைவிட்டு வெளியே வரும் யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று அவற்றை இடித்துச் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், குட்டியுடன் 5 யானைகள் நல்லமுடி எஸ்டேட் காட்சிமுனைப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளன. அங்கு அமைந்துள்ள வேட்டைத் தடுப்புக் காவலர்களின் ஓய்வு அறையை அந்த யானைகள் முட்டித் தள்ளிச் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டன. இதில், அறையின் சுவர்கள் சேதமடைந்தன.
மீண்டும் அதே பகுதிக்கு யானைகள் அதிகாலையில் வந்ததால், சுற்றுலாத் தலமான நல்லமுடி காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் சனிக்கிழமை தடை விதித்துள்ளனர்.