அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பிறந்த 9 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது பற்றி மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட 9 பச்சிளம் குழந்தைகள் திடீரென உயிரிழந்த்துள்ளனர்.
குஜராத்தின் லுனாவாடா, சுரேந்திராநகர், மன்சா, விராம்கம், ஹிம்மத்நகர் ஆகிய தொலைதூர பகுதிகளில் பிறந்த 5 குழந்தைகள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த குழந்தைகள் குறைந்த (1.1 கிலோ) எடையுடனும், அஸ்பிசிசியா, ஹைலைன் மென்சவ்வு நோய் மற்றும் செப்டிசெமியா போன்ற உயிருக்கு அச்சுறுத்தலான நோய்கள் இருந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக மருத்துவர் கர்கி பத்தக் கூறினார்.
இந்நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்தபின் உயிரிழந்துள்ளன. இந்த நிலையில், கடந்த 3 நாட்களில் 18 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் உயிரிழந்துள்ளன என மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் நகர மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 6 குழந்தைகள் உயிரிழக்கின்றன என்றும் அரசு அறிக்கை தெரிவிக்கின்றது.
இது குறித்து முதல்வர் விஜய் ரூபானி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தைகள் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மூத்த சுகாதார அதிகாரிகளுடன் காந்திநகரில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள மருத்துவ கல்வி துணை இயக்குநர் ஆர்.கே. தீட்சித் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மூளை அழற்சி காரணம் மேலும் ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் செயல்படும் பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 70க்கும் அதிகமான குழந்தைகள் மரணமடைந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதிற்கு பின்னர் இச்சம்பவம் மீண்டும் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.