சென்னை: அதிமுக என்னும் கட்சியினைப் பற்றிப் பேச தினகரனுக்கு எந்த அருகதையும் இல்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
அதிமுகவின் பெயர் மற்றும் சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கனவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது. அவரும் அது போலவே கனவு காணலாம். இது தொடர்பான இறுதி விசாரணை நாளை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்பொழுது உண்மை வென்று விடும்.
அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையினை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தவர் தினகரன். எனவே அதிமுக என்னும் கட்சியினைப் பற்றியோ, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்துப் பேசவோ தினகரனுக்கு எந்த அருகதையம் இல்லை. கட்சிக்கு அவர் ஒரு துரோகி.
தேர்தல் ஆணையத்தில் நாங்கள் தாக்கல் செய்த பிரமானப் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தினகரன் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இது வழக்கின் தீர்ப்பினை காலம் தாழ்த்தும் நோக்கம் கொண்ட செயலாகும்.
இது தொடர்பாக புதிய வழக்கு தாக்கல் செய்வது, கூடுதல் அவகாசம் கேட்பது என முன்பிருந்தே அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். நாங்கள் கடந்த மாதம் 19-ஆம் தேதி வாக்கில் முழுமையான ஆவணங்களை தாக்கல் செய்து விட்டோம். ஆனால் தற்பொழுதுதான் அவர்கள் மறு ஆய்வுக்கு நேரம் கேட்கின்றனர்.
அதிமுக என்னும் இயக்கத்தினை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் திமுகவின் எண்ணத்திற்கு ஆதரவாக, அவர்களுக்காக தினகரன் செயல்படுகிறார்.
இவ்வாறு அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.