சென்னை: நிலவேம்பு தொடர்பாக முரணான தகவல் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் கமல் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை என்று தமிழக காவல்துறை முடிவு செய்துஅறிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து, இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம், வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி நிலவேம்புக் குடிநீர் குறித்த தனது டிவிட்டர் பதிவில் கருத்து வெளியிட்டிருந்த நடிகர் கமல், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை தனது இயக்கத்தினர் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம். நிலவேம்பு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அரசின் செயல்பாடுகள் குறித்தும் நிலவேம்புக் குடிநீர் குறித்தும் தவறான தகவல் பரப்பும் கமல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இப்புகார் மீது 5 நாள்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தனது புகார் மனுவில், 'எந்தவித ஆதாரமும் இல்லாமல் கமல் இதுபோல கருத்துத் தெரிவித்து வருகிறார். நிலவேம்புக் குடிநீர், உண்மையில் சிறந்த மருந்து என சித்த மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தவறான கருத்து தெரிவித்து மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திய கமல், மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் கடந்த 25-ஆம் தேதி (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகார் மீது காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு, முகாந்திரம் இருந்தால் நடிகர் கமல் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இந்நிலையில் நிலவேம்பு தொடர்பாக முரணான தகவல் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் கமல் மீது வழக்கு பதிய முகாந்திரமில்லை என்று தமிழக காவல்துறை முடிவு செய்துஅறிவித்துள்ளது. இது தொடர்பாக மனுதாரர் தேவராஜனுக்கு கடிதம் அனுப்பப்படும் என்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.