சென்னை: தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்காக மாணவர்கள் பெரும் திரளாக குவிந்து போராட்டம் நடத்தக் கூடும் என்று உத்தேசித்து, சென்னை மெரினா கடற்கரை காவல்துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போராடிய அரியலூர் மாணவி அனிதா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவமானது தமிழகத்தையே சோகத்தில் மூழ்க செய்து உள்ளது. உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் திரண்டனர்.
சென்னை அண்ணா சாலையிலும் மாணவர்கள் திரண்டு சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மெரினாவில் மாணவர்கள் அதிக அளவில் கூடி போராட்டத்தில் ஈடுபடலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.
இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை காவல்துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.