அரியலூர்: தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக, அவரது தந்தை சண்முகம் புகார் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றதில் 'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாயினை இழந்து விட்ட அனிதாவின் தந்தை சண்முகம் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி ஆவார். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான அனிதா +2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அத்துடன் மருத்துவ சேர்க்கைக்கான 'கட் ஆப்பாக' 196.75 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
வீட்டில் சடங்குகள் முடிந்த பின்னர் மாணவி அனிதாவின் உடல் தற்பொழுது அரியலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவி அனிதாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கு தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக, அவரது தந்தை சண்முகம் புகார் தெரிவித்துள்ளார்.
தன்னை மிரட்டி கார் ஒன்றில் ஏற்றி அழைத்து வந்தவர்கள் பின்னர் கையெழுத்து போடுமாறு மிரட்டி வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பிரேதப் பரிசோதனை முடிந்து வழங்கப்பட்ட அனிதாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் அரியலூரில் போராட்டடம் நடத்தி வருகின்றனர்.