தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியப் பெருங்கடல் -2017 மாநாட்டில் பங்கேற்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கு சென்றுள்ளார். இலங்கை, வங்கதேசம், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட 35 நாடுகளின் அமைச்சகப் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். அமைதி, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை கருப்பொருள்களாகக் கொண்டு இந்த நடைபெறும் இந்த மாநாட்டில், இந்திய மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை கடற்படையால் ஏற்படும் பெரும் பாதிப்பையும், இதனால் இந்திய பொருளாதார வளர்ச்சியும் தடைபடுவது குறித்தும், அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச வேண்டும்.
இலங்கைப் பிரதமர் மற்றும் அதிபரைச் சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்த வேண்டும். மேலும் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 83 மீனவர்களை விடுதலை செய்வதுடன், அவர்களின் விசைப்படகுகளையும் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் தெரிவித்துள்ளார்.