முருகனை சந்திக்க அனுமதி கோரும் மனுக்களை சிறை விதிகளின்படி பரிசீலிக்க உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான முருகனை சந்திக்க அனுமதி கோரி அவரது உறவினர் தேன்மொழி தொடர்ந்த வழக்கில், சிறை விதிகளின்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சிறை துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான முருகன், ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் உணவு உண்ணாமலும், யாரிடமும் பேசாமலும் தியானத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் சிறையில் இருக்கும் முருகனை பார்ப்பதற்கு அனுமதி கோரி அவரது உறவினர் தேன்மொழி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முருகனின் உடல்நிலை குறித்த முழு மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேலூர் சிறைத் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து சிறைத் துறை சார்பில் மருத்துவ அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிறை அதிகாரிகள் புதன்கிழமை (ஆக.30) முருகனுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
இதனிடையே, இந்த வழக்கு, நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர், 'முருகன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டதால் சிறை விதிகளின்படி பார்வையாளர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படும் என்றும், சந்திப்பு தொடர்பாக உரிய முறையில் மனு அளித்தால் அதனை சிறை விதிகளின் படி பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரான தேன்மொழி, முருகனை சந்திக்க சிறைத் துறைக்கு மனு அளிக்க உத்தரவிட்டனர். அந்த மனு மீது மூன்று நாள்களுக்குள் பரீசிலிக்க சிறைத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.