சென்னை: வரும் நவம்பர் 17-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளில் மாற்றும் கொண்டு வந்து கடந்த வருட இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு நடைமுறைகளில் சரியான அளவில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றமானது உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் என்று அறிவித்தது. அந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்தது
ஆனால் தொகுதி மறு வரையறை தொடர்பான பணிகள் நிறைவு பெறாததால் தேர்தலை குறிப்பிட்ட கெடுவில் நடத்த முடியாது என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது
அதே நேரம் தனி நீதிபதியின் ரத்து அறிவிப்புக்கு எதிராக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்ட பொழுது, அதனை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த மனுக்கள் இன்று நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம் வருமாறு:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதேபோல இதற்கான தேர்தல் அறிவிப்பு வரும் செப்டம்பர் 18-ஆம் தேதியன்று வெளியிடப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விபரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
அதே நேரம் இந்த தீர்ப்பானது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டது.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.