சென்னை: அரியலூர் மாணவி அனிதா தற்கொலை குறித்து கடும் விமரிசனத்தை முன்வைத்த டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள் +2வில் எடுத்த மதிப்பெண் எவ்வளவு என்று அறிய பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
மாணவி அனிதா தனியார் பள்ளியில் ஒன்றரை லட்சம் அளவுக்கு பணம் கட்டிப் படித்தவர் என்ற குற்றச்சாட்டை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முன் வைத்தார். அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இல்லை என்று நீங்கள் சொன்னால் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று பதலளித்தார்.
மேலும், அனிதா மரணத்துக்கு எதிராக சில கருத்துகளையும், விமரிசனங்களையும் முன் வைத்து சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், கிருஷ்ணசாமியின் மகளுக்கு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் சிபாரிசினால்தான் மருத்துவ சீட்டு கிடைத்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பால பாரதி, தனது பேஸ்புக்கில் பதிவிட்டார்.
இதனால், அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதியப்பட்டன. கிருஷ்ணசாமியின் மகளுக்கு ஒரு நீதி, அனிதாவுக்கு ஒரு நீதியா என்ற கேள்விக் கணைகள் எழுந்தன.
சில முறை செய்தியாளர்கள் சந்திப்பின்போதும், உங்கள் மகளின் மதிப்பெண் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளிக்காமலேயே நழுவினார் கிருஷ்ணசாமி.
இந்த நிலையில், செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போதும் இதே கேள்வி. ஆனால் இந்த முறை தப்பிக்க முடியவில்லை. மதிப்பெண் எனக்குத் தெரியாது. ஞாபகமில்லை என்று பதிலளித்தார்.
கேள்வி கேட்டவர் விடவில்லை. உடனே கிருஷ்ணசாமி தனது மகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர் பெற்ற மதிப்பெண்ணை பகிரங்கமாக அறிவித்தார்.
அதாவது, கிருஷ்ணசாமியின் மகள் பிளஸ் 2வில் 1200க்கு 1063 மதிப்பெண்களை எடுத்துள்ளார் என்பதுமே அனைவரும் அறிய விரும்பிய அந்த மதிப்பெண்.