அடித்துக் கொன்ற விஷப் பாம்புகளுடன் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த இருளர் இன மக்கள், தங்கள் குடியிருப்புக்கு மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்ப்புத்தூர் கிராமத்தில் இருளர் குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 15-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புக்கு இதுவரை மின்வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் குடியிருப்பில் உள்ள பச்சையப்பன் என்பவர் தனது குடும்பத்தினருடன் தனது குடிசை வீட்டில் திங்கள்கிழமை இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, சுமார் 4 அடி நீளமுள்ள 2 கட்டுவிரியன் பாம்புகள் இவர் மீது ஊர்ந்து சென்றனவாம். இதையடுத்து, அலறி அடித்து எழுந்த பச்சையப்பன், 2 பாம்புகளையும் அடித்துக் கொன்றாராம். பின்னர், அடித்துக் கொன்ற அந்த பாம்புகளுடன் செவ்வாய்க்கிழமை காலை பச்சையப்பன் மற்றும் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த சிலர் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர் . இதையடுத்து, தங்கள் குடியிருப்பில் இதுவரை மின் வசதி செய்து தராததால் இரவு நேரங்களில் விஷச் ஜந்துக்களின் அபாயம் இருப்பதாக வட்டாட்சியர் முரளிதரனிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மனு அளிக்கும்படி வட்டாட்சியர் முரளிதரன், இருளர் இன மக்களிடம் கூறினார். பின்னர், தங்கள் பகுதிக்கு மின் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, அவர்கள் வட்டாட்சியர் முரளிதரனிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணைச் செயலர் யாசர்அராபத், மாவட்டக்குழு உறுப்பினர் அப்துல்காதர் ஆகியோர் அவர்களுடன் இருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் முரளிதரன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, இருளர் இன மக்கள் புறப்பட்டுச் சென்றனர்.