புதுச்சேரியில் மொபைல் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) செயலி சேவையை முதல்வர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வேண்டி விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரரின் விபரங்கள் அடங்கிய படிவத்தை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பதிவிறக்கம் செய்து, விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறைக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் தொடர்ச்சியாக போலீசார் விண்ணப்பித்தவர் அளித்துள்ள முகவரிக்கு சென்று அவர் அளித்த முகவரியில் வசித்து வருகிறாரா, அவர் குறிப்பிட்டுள்ள தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா, அவர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்று விசாரணை செய்வார்கள்.
பின்னர், விசாரணை அறிக்கையை ஆன்லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பது வழக்கம். வழக்கமான இந்த நடைமுறைகளை நிறைவு செய்து அனுப்ப 6 முதல் 7 நாட்கள் வரை ஆகும். எனவே, டிஜிட்டல் முறையில் காகித பயன்பாடு இன்றி காலதாமதத்தை குறைத்து விரைவாக பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு வெளியுறவுத்துறை அறிவுறுத்தலின் பேரில், புதுவை காவல்துறை பயன்பாட்டிற்காக மொபைல் பாஸ்போர்ட் என்னும் செயலி துவக்க விழா சட்டப்பேரவை கூட்ட அரங்கில் நடைபெற்றது.
காவல்துறை பயன்பாட்டிற்கான மொபைல் பாஸ்போர்ட் செயலியை அறிமுகப்படுத்தி, அதன் பயன்பாட்டை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். மேலும், போலீசார் விசாணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு வசதியாக 20 டேப்லெட்டுகளையும் வழங்கினார். தலைமை செயலர் மனோஜ் பரிதா, டிஜிபி சுனில்குமார் கவுதம், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக் பாபு, சீனியர் எஸ்பிக்கள் ராஜீவ் ரஞ்சன், அபூர்வா குப்தா மற்றும் எஸ்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த மொபைல் செயலியின் மூலம் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்தவர்களை பற்றி விசாரணை அறிக்கையை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விரைவாக சமர்ப்பிக்க முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்கும்.