சட்டப்பேரவையை ஒரு வாரத்தில் கூட்ட வேண்டுமென பேரவை காங்கிரஸ் கட்சிக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள அவர்களது அறையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, ராமசாமி அளித்த பேட்டி:
ஆளும் அரசு செயல்படாத அரசாக உள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசில் பணியாற்றும் ஊழியர்கள், பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் அரசு இன்று முடங்கி இருக்கிறது.
மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வை இந்த அரசால் ஏன் தடுக்க முடியவில்லை? அதற்கான காரணம், மத்திய அரசின் தயவு இந்த அரசுக்குத் தேவைப்படுகிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அண்மையில் இந்த அரசை ஊழல் அரசு என்று விமர்சித்தார். தற்போது அந்த அரசில் இணைந்துவிட்டார். ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களை நீக்குவதற்கு துரிதமாக வேலை நடக்கிறது.
எந்த அரசு வேண்டுமானலும் இருக்கட்டும். ஆனால், மக்களைக் கவனிக்காத, மக்கள் விரோத அரசு நிலைக்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். தற்போது எங்களது கோரிக்கை சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்பதே. நாங்கள் ஆளுநரைச் சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளோம். ஒரு வாரத்தில் சட்டப்பேரவை கூட்டப்படவில்லை என்றால் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் அவர்.