அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு அக்கறை எதுவும் இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். இதனை வரவேற்கிறேன்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் பிரச்னைக்கு ஆட்சியாளர்கள் சுமுகத் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களுக்கு அரசு ஊழியர்களின் பிரச்னை குறித்து எந்தக் கவலையும் இல்லை. அவர்களுக்கு உள்ள கவலையெல்லாம் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.
தமிழ் வளர்ச்சி, ஆதிதிராவிடர் நலத் துறை உள்பட பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சம்ஸ்கிருதம், ஹிந்தி மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதைத்தான் மாநில அரசு தன் கடமையாக வைத்துள்ளது என்றார் அவர்.
திமுக தலைவர் கருணாநிதி அரசியலில் செயல்படும் நிலையில் இருந்தால், நீட் தேர்வை ஆதரித்திருப்பார் என்று பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியிருப்பது குறித்து ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "தரம் தாழ்ந்து சொல்லப்படுவதற்கு எல்லாம் பதில் அளித்து, என் தரத்தைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை' என்றார் ஸ்டாலின்.