சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக பெய்துள்ளது.
இதனால், காவிரிப் படுகை முழுவதும் சீரான மழை பெய்துள்ளதால் கடைமடை வரை விவசாய நிலங்கள் ஓரளவுக்கு ஈரப்பதமாக உள்ளன. மேலும் வட கிழக்கு பருவமழையும் சராசரி அளவுக்குப் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் 30 }ஆம் தேதிக்குள் தண்ணீரைத் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் விவசாயம் செய்வதற்குத் தேவையான விதை நெல், உரம், பயிர்க்கடன் ஆகியவற்றை முன்னதாகவே வழங்கி, விவசாயிகளைச் சம்பா சாகுபடிக்கு தயார் நிலையில் வைக்க வேண்டும்.
குறிப்பாக, கர்நாடக அரசு செப்டம்பர் 30 }ஆம் தேதி வரை 134 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், இதுவரை 20 டிஎம்சி தண்ணீரைகூட திறந்துவிடவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் பேசி 20 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.