வழக்குகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சுகிறார் என்று அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
சென்னையில் தனது இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு தினகரன் சனிக்கிழமை அளித்த பேட்டி: தேர்தல் கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதுள்ள கோபத்தால் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் என்னை மாமியார் வீட்டுக்கு (சிறை) அனுப்பி வைத்தார்.
பலமுறை மாமியார் வீட்டுக்கு (சிறை) சென்றவன் நான். நான் பலமுறை சிறை சென்றதால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். அதன்பின், பெரியகுளம் மக்களவைத் தொகுதியில், தேர்தலில் நிற்க வைத்தார் ஜெயலலிதா. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தார். அந்நியச் செலவாணி விதிமீறல் குற்றச்சாட்டுக்கே உள்ளே (சிறை) சென்றேன்.
முதல்வரான பிறகு பயமாக இருக்கிறது என எடப்பாடி கே.பழனிசாமி என்னிடம் தெரிவித்தார். அவரது மகனின் சகலை கைது செய்யப்பட்டார். எந்த நேரத்திலும் அவரும், பையனும் கைதாகி விடுவோம் என அஞ்சி என்னிடம் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் விதிவசத்தால் பழனிசாமியை அமர வைத்து விட்டோம். டிடிவி தினகரனாலேயே பழனிசாமி முதல்வராக உட்கார்ந்து இருக்கிறார் என தம்பிதுரை கூறியுள்ளார். அவருக்கு நன்றி என்றார் தினகரன்.