மதுரை: திமுக தலைமை ஏற்க மு.க. ஸ்டாலின் தகுதியான ஆள் கிடையாது. அவரது இடத்தில் மு.க அழகிரி இருந்திருந்தால் அனைவரையும் ஆட்டிப் படைத்திருப்பார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
பெரியாரின் 139-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திராவிட இயக்க வரலாற்றில் பெரியாரின் கொள்கைகளை மதித்து நடக்கும் கட்சி அதிமுக. பெரியாரின் கொள்கைப்படி பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தில் பிற மொழிகளை மாணவர்களிடையே கொண்டுவர எந்தவித சட்ட மசோதாவும் சட்டப்பேரவையில் கொண்டு வரப்படவில்லை.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக இருப்பதால் எதிர்கட்சி வலுவலற்ற நிலையில் உள்ளது. இதனால் தற்போதுள்ள எதிர்கட்சியால் அதிமுகவை ஒன்றும் செய்திட முடியாது என்றார்.
மேலும், திமுக தலைமை ஏற்க மு.க ஸ்டாலின் சரியான ஆள் இல்லை. சயமாக செயல்படக்கூடியவர் என்றும், அவரை மற்றவர்கள் தான் இயக்குகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பேசப்பட்டவர் அழகிரிதான். மு.க ஸ்டாலின் இடத்தில் மு.க அழகிரி இருந்திருந்தால் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு அதிமுகவிற்கு பெரிய நெருக்கடியை கொடுத்து அனைவரையும் ஆட்டிப்படைத்திருப்பார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இந்நிலையில், ஸ்டாலினை விமர்சிக்கும் எந்த தகுதியும் செல்லூர் ராஜூக்கு இல்லை என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.