18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆளுநரிடம் மனு அளித்ததை வைத்து 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முதல்வரும், சபாநாயகருடன் கூட்டு சேர்ந்து ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளனர். குறுக்குவழியில் வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கும் ஈபிஎஸ் அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும்.
ஈபிஎஸ் அரசை காப்பாற்ற தவறான வழியில் சென்று சபாநாயகர் பதவிக்குரிய மாண்பை கெடுத்துவிட்டார். பேரவையை சந்தித்து வெற்றி பெற முடியாத நிலையை தகுதிநீக்க நடவடிக்கை காட்டுகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதரணமான அரசியல் நெருக்கடிக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் திமுக ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.