சபாநாயகரின் உத்தரவில் யாரும் தலையிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க மு.க. ஸ்டாலினும், தினகரனும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. ஜனநாயக முறைப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதால், அதில் யாரும் தலையிட முடியாது.
தமிழக வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச தில்லிக்கு வந்துள்ளோம். இன்றைக்கு தேர்தல் ஆணையர்களை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. கட்சியில் எந்தவித குழப்பமும் இல்லை, ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.