சென்னை: தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பற்றி டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று நம்புவதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது, தேர்தலுக்கான சூழல் இல்லை என்று கூறி இன்னும் எவ்வளவு காலம் தாழ்த்துவீர்கள்? ஆர்.கே. நகரில் இடைத் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்று கடந்த ஜூன் மாதம் கூறினீர்கள். அதன்பிறகு, தேர்தல் நடத்த எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் குறித்து டிசம்பர் 31க்குள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என நம்புகிறோம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இது ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு, உயர் நீதிமன்றம் வைத்த காலக்கெடு என்றே பார்க்கப்படுகிறது.
பின்னணி: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, காலியான ஆர்.கே. நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை அடுத்து, தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.