ஆளுநர் வித்யாசாகர் ராவ் செவ்வாய்க்கிழமை (செப். 19) நண்பகல் 12.40 மணியளவில் சென்னை வருகிறார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவர் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
குறிப்பாக, பேரவைத் தலைவர் பி.தனபால், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பைப் பொருத்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நம்பிக்கை வாக்குக் கோருமாறு அவர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடக் கூடும் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.