காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 'தூய்மையே சேவை திட்டம்' குறித்து ஆட்சியர் எ.சுந்தரவல்லி திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் மற்றும் குப்பைகள் தேங்கினால், உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர், மருத்துவமனையில் எத்தனை பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற விவரம் குறித்து அரசு மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் சுந்தரவல்லி கூறியதாவது: திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தற்போது, 289 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், டெங்கு காய்ச்சல் அறிகுறியோடு 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மாவட்டம் முழுவதும் 12 அரசு மருத்துவமனைகள், 122 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. இங்கு போதுமான அளவில் மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் உள்ளன. பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட அலுவலர் குமார், மருத்துவத் துறை இணை இயக்குநர் தயாளன், துணை இயக்குநர் பிரபாகரன், கண்காணிப்பாளர் சேகர், கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, வட்டாட்சியர் கார்குழலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.