சென்னை: நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் தற்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில், பழனியப்பனுக்கும், தென்னரசுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், இருநபர் உத்தரவாதமும், ரூ.10,000 வைப்புத் தொகையும் செலுத்த உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்குத் தேவைப்படும் போது அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதோடு, நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் எழுதி வைத்த தற்கொலை கடிதம் இருந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது ஏன் என்றும், சிபிசிஐடிக்கு விசாரிக்க வேறு வழக்கு இல்லையா எனவும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகில் சொகு விடுதியில் தங்கியிருந்த பழனியப்பன், திடீரென தலைமறைவானார். எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலை, ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், கடந்த மே மாதம் மோகனூர் அருகே உள்ள பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து சுப்பிரமணியன் எழுதிய கடிதத்தை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான பழனியப்பனின் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர். அப்போது பழனியப்பன் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் பழனியப்பன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.