18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தமிழக ஆளுநர் நடுநிலையுடன் செயல்படுவார் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றார் அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜனநாயக படுகொலையில் மத்திய அரசின் தலையீடு இருந்திருந்தால் தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களும் பாஜகவுக்கு சரியான பதிலடியைத் தருவார்கள்.
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உரிய பதிலடியை நிச்சயம் தருவார்கள். நீட் தேர்வுக்கு மட்டுமல்ல, காவிரி டெல்டாவில் கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளில் மீத்தேனுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் போன்ற மக்கள் நலப் பிரச்னைகளுக்காக போராட்டங்களையும் முன்னெடுப்போம்.
18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆளுநர் தமிழகம் வந்துள்ளார். அவர் இப்பிரச்னையில் நடுநிலையுடன் செயல்படுவார் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றார் தினகரன்.
இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருவானைக்காக அகிலாண்டேசுவரி அம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில்களில் டி.டி.வி. தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, மாவட்டச் செயலர்கள் திருச்சி வடக்கு ஆர். மனோகரன், திருச்சி மாநகர் ஜெ. சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.