மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினார்.
நாகையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இன்று காலை மயிலாடுதுறை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, காலை 10 மணியளவில், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில், காவிரி மகா புஷ்கரத்தில் புனித நீராடினார். அவருடன் அமைச்சர் மணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன், காமராஜ், கருப்பணன் உள்ளிடடோரும் புனித நீராடினார். அரசு கொறடா ராஜேந்திரனும் காவிரியில் புனித நீராடினர்.
காவிரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனித நீராடுவதை முன்னிட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில், காவிரி மகா புஷ்கரம் விழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தினமும் பல்லாயிரக்கணக்கானோர் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி வருகின்றனர்.
அரசுத் துறை நிர்வாகங்கள் சார்பில், புனித நீராட வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் மயிலாடுதுறையில் முகாமிட்டு துப்புரவு, தொற்றுநோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.