சென்னை: மறு உத்தரவு வரும் வரை தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, 18 பேர் இல்லாமல் அவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று அவைத் தலைவர் தரப்பில் கூறப்பட்டது.
இந்த பதிலைக் கேட்ட நீதிபதி துரைசாமி, தகுதி நீக்கத்துக்கு ஏன் இடைக்காலத் தடை விதிக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்தவித அறிவிக்கையும் வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணயை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி துரைசாமி.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தனித்தனியாக மனு தாக்கல் செய்த போதும், 18 மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்துமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராமசாமி, 18 மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.