பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்துத் தர வேண்டும் என நாகை சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகைக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை வருகை தந்தார். பயணியர் மாளிகையில் முதல்வரை சந்தித்து நாகை சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி கோரிக்கை மனு அளித்தார். அதில் பேரறிவாளனுக்கு பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை சாதி, மத, அரசியல், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து சட்டநிபுணர்களிடம் கருத்து கேட்பதாகவும், சிறைவாசிகள் விடுதலை குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டல்படி நடப்போம் என முதல்வர் பதில் தெரிவித்ததாக கூறினார்.
இதையடுத்து நாகை தொகுதிக்குரிய கோரிக்கை மனுவை அளித்தார். அதில் நாகை துறைமுகத்தை மேம்படுத்தி செயல்படுத்த வேண்டும். நாகைக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும். நாகூர், பனங்குடி, பட்டினச்சேரி மக்களை பாதிக்கும் "மார்க்" துறைமுகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும். நரிமணம்-உத்தம சோழபுரம் அருகே வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும். நாகூரில் வெட்டாற்றின் கரையில் மீனவர்களின் நலன் காக்கும் வகையில் வெட்டாற்றின் மறு கரையில் கற்களை கொட்டி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும். நாகை தாமரைக் குளத்தை சீரமைத்து தர வேண்டும்.
நாகை, நாகூர் கடற்கரையை மேம்படுத்த வேண்டும். பனங்குடி ஏரியை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பட்டியலிட்டு அதன் முக்கியத்துவம் குறித்தும் முதல்வரிடம் பேசினார். தற்போது நடுநிலை வகிப்பதாக கூறும் நாகை சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். எனினும் அரசு சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.