எதிர்பார்ப்பது போலவே நீதியும் - நியாயமும் வரும் 4 ஆம் தேதி நிச்சயம் வெற்றி பெறும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நீதியும், நியாயமும் வெற்றிபெறும் என்பதை நேற்றைய தினம் நீதிபதி தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். எனவே, எதிர்வரும் 4 ஆம் தேதி நாங்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு நிச்சயமாக வரும் என்று நம்புகிறோம். நீதிமன்றத்தின் முடிவு தெரிந்த பிறகுதான் நாங்கள் அடுத்தகட்ட முடிவை எடுக்க இருக்கிறோம்.
சாமியாரை சென்று பார்ப்பது, மயிலாடுதுறையில் குளத்தில் மூழ்கியது எல்லாம் தான் செய்த பாவங்களை எல்லாம் போக்கி விடும் என்று நினைத்துக் கொண்டு இதையெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்கிறார். ஆனால், உண்மையில் அவர் அங்கு சென்று மூழ்கியதன் மூலம் அந்தக் குளத்துக்கு அதிக பாவத்தைத் தேடித் தந்திருப்பதாகவே என்றே கருதுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.