ஐஐடி மெட்ராஸில் 3-ஆம் ஆண்டு மெகானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் பிரேம் அவினாஷ்.
ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள நர்மதா விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 தினங்களுக்கு முன்னால் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு மாணவர் பிரேம் அவினாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார். இதனால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் அவினாஷுக்கு ரத்த அணுக்கள் குறைவாக இருந்தது. சிறுநீரகம் செயலழிக்கத் துவங்கியது. மேலும், கடந்த புதன்கிழமை முதல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் அவரது ஒவ்வொரு உடல் உறுப்புகளாக செயலிழந்து வந்துள்ளது.
மாணவர் பிரேம் அவினாஷின் இந்த திடீர் மறைவு அவரது குடும்பத்தார், நண்பர்கள் உள்ளிட்டோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவை அடுத்து அவரது கல்லூரி வளாகத்தில் 4 மணிக்கு இரங்கல் கூட்டம் நடந்தது. மேலும், மாணவர் அவினாஷ் நினைவாக ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
மறைந்த மாணவர் அவினாஷ் சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திறமையானவர். அவருடைய மறைவு பேரிழப்பு. அவினாஷ் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக ஆசிரியர்களும், சக மாணவர்களும் தெரிவித்தனர்.