கரூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் வி. செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
தற்போது தினகரன் அணியில் இருக்கும் வி. செந்தில்பாலாஜி உள்பட 18 எம்எல்ஏக்களை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அண்மையில் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜி உறவினர்களின் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், குளத்துப்பாளையம், ராயனூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அவரது நெருங்கிய நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். மொத்தம் மாவட்டத்தில் 18 இடங்களில் பல குழுக்களாகச் சென்று ஒரே நாளில் சோதனை மேற்கொண்டனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரையிலும் நீடித்தது.
இந்த சோதனையின்போது வெளிநபர்கள் யாரையும் அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கியதா எனத் தெரியவில்லை. தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.