சென்னை: ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்ற செய்தி பொய் என்று நாங்கள் அப்போதே கூறினோம் என்று தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் நோய்க்கு மருந்தளிக்கவில்லை. மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் எனவும் ஜெயலலிதாவை பார்த்ததாக நாங்கள் சசிகலாவுக்கு பயந்துகொண்டு பொய் சொல்லிவிட்டோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரையில் நடந்த கட்சி கூட்டத்தில் கூறி அதற்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்ற செய்தி பொய் என்று நாங்கள் அப்போதே கூறினோம். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடந்த பிறகே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று கூறினார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பொய் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன் தெரிவித்த கருத்துக்கு ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
மேலும், குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வசூல் வேட்டையை நிறுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.