மேட்டூர் அணையின் நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 11,849 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால், அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
உபரி நீர் காரணமாக வியாழக்கிழமை காலை நொடிக்கு 6,479 கன அடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 11,849 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 41.29 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.33 அடியாக உயர்ந்துள்ளது.