உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய புலிகள் காப்பக ஆணைய விதிமுறைகளுக்கு உள்பட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுலாவுக்காக திறந்துவிடப்பட உள்ளது.
தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இங்கு புலிகள் வாழ்வதற்கு ஏற்ற வனச்சூழல் உள்ளதால் புலிகளின் எண்ணிக்கை 70-ஐ தாண்டியுள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் இந்தப் புலிகள் காப்பகப் பகுதிகளை பொதுமக்கள் கண்டு ரசிக்க வனச் சுற்றுலாத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வனச் சுற்றுலாத் திட்டத்தில் நீர்வீழ்ச்சிகள், இயற்கை எழில் சூழ்ந்த மலை முகடுகள், வனக்குட்டைகள், வன விலங்குகளைப் பார்த்து ரசிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் இதற்கென உருவாக்கப்பட்ட தனி பேருந்தில் 50 கி.மீ. தொலைவு வரை அழைத்துச் செல்லப்படுவர்.
மலையேறுதல், யானை சவாரியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசித்தபடி சுற்றுலாப் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க புதிய சொகுசு தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளன.
சுற்றுலாத் திட்டத்துக்கு முன்ஏற்பாடாக ஆசனூரில் புலி உருவம்போன்று சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் வழங்குமிடம் மற்றும் ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு புலி போன்ற வர்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். புலிகள் காப்பக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசனூர் பங்களாத்தொட்டியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் பொறித்த பனியன், டி சர்ட், தொப்பி ஆகியவை விற்கப்படுகின்றன. விரைவில் ஆன் லைன் மூலம் தொடங்கப்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.