செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளியை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு பகுதியிலிருந்து கல்யாணி நீர்த்தேக்கம் செல்லும் வழியில் சனிக்கிழமை இரவு அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புல்லய்யாகாரிபள்ளி வனப்பகுதியில் 10 தொழிலாளர்கள் செம்மரக் கட்டைகளை சுமந்து சென்று கொண்டிருந்தனர்.
அதிரடிப்படையினரை கண்டவுடன் அவர்கள், செம்மரக் கட்டைகளை போட்டு விட்டு, தப்பியோடினர். அவர்களை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, 9 செம்மரக்கட்டைகள், உணவுப் பொருள்களை அதிரடிப் படையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையைச் சேர்ந்த அழகேசன் (34) என்பது தெரியவந்தது.
மலும், "வறுமை காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு கிலோ செம்மரக்கட்டை சுமந்து சென்றால் ரூ. 400 கூலியாக வழங்கப்படுவதாகவும், தங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேறு வழியில்லாததால் ஜவ்வாதுமலையைச் சேர்ந்த பலர், செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸாரிடம் அழகேசன் தெரிவித்தார்.