பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்ட ஆணையின் நகலை சிறைத் துறை காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை பேரறிவாளனிடம் வழங்கினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் உள்ளார்.
இந்நிலையில், அவரது தந்தை குயில்தாசனுக்கு மருத்துவ சிகிச்சையின் போது பேரறிவாளன் உடனிருக்க வேண்டும் என்பதால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள், கடந்த 20-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை ஏற்று பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க முதல்வர் ஒப்புதல் அளித்தார். அதன் அடிப்படையில் பரோலை நீட்டிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து பேரறிவாளன் அக்டோபர் 24-ஆம் தேதி வரை தனது வீட்டிலேயே தங்கியிருக்க முடியும். ஏற்கெனவே ஒரு மாத காலம் பரோலில் இருந்த போது என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே விதிமுறைகள் தொடரும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையின் நகலை சிறைத் துறை காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை பேரறிவாளனின் வீட்டிற்கு வந்து அவரிடம் வழங்கினர்.