போக்குவரத்துக்கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் தமிழக அரசு ஈடுபட்டு குறிப்பிட்ட மாதத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்துள்ளது.
இதுபோல, போக்குவரத்துக்கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமையில் திங்கள்கிழமை (செப்.25) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதில் அவர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். தற்போது பண்டிகைக் காலம் என்பதால், பொதுமக்களுக்கான போக்குவரத்தில் எந்தவிதத் தடையும் ஏற்பட்டுவிடாத வகையில், திங்கள்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு.