மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயிலில் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ், சுத்தம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில், செப்டம்பர் 15-ஆம் தேதி முதல், அக்டோபர் 2-ஆம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கம் திட்டத்தின் கீழ், சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, பொன்னேரி வட்டம், மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயிலில் தூய்மைப் பணிகளை ஆட்சியர் சுந்தரவல்லி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், 5 நகராட்சிகளில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் திறந்தவெளியில் மலம், ஜலம் கழித்தல் பழக்கத்தை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மக்களின் பங்கேற்பை ஏற்படுத்தும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையே சேவை இயக்கம் நடத்தப்படுகிறது. அதன்படி, கோயில்கள், சுற்றுலாத் தலங்களில் தற்போது தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா. குமார், பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, வட்டாட்சியர் சுமதி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.